
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அதன் தற்போதைய இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் எதிர்வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளான இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக. தலைமைக் கழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவை முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் முன்மொழிந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர் உட்பட 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்துள்ளனர். முன்மொழிவு மற்றும் வழிமொழிந்தவர்களின் பெரும்பாலானார் ஓபிஎஸ்சின் சமூகமான முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்காக வேறு யாரும் இதற்காக மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் எனத் தெரிகிறது. எனவே, அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.