`தயவுசெய்து உங்க அறிவுரை வேண்டாம்; நல்லா இருக்கிறோம்'- யாரைச் சாடுகிறார் எடப்பாடி பழனிசாமி

`தயவுசெய்து உங்க அறிவுரை வேண்டாம்; நல்லா இருக்கிறோம்'- யாரைச் சாடுகிறார் எடப்பாடி பழனிசாமி

"நீங்க எந்தெந்த கட்சிக்கு போய் அறிவுரை எல்லாம் சொன்னீர்களோ அந்த கட்சி எல்லாம் ஒன்னும் இல்லாமல் போய்விட்டது. அதனால் உங்களுடைய அறிவுரை எங்களுக்கு தேவையில்லை" என்று பண்ருட்டி ராமச்சந்திரனை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய கட்சியின் இடைக்கால பாெதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் தான் இருப்பார். ஆனால் தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு குடும்பம் அதிகார மையமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்திலே பங்குபெற்று தங்கள் அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மருமகன், அவருடைய மகன், அவருடைய மனைவி இவர்கள்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர் பேசுகையில், "பண்ருட்டி ராமச்சந்திரன் ஜெயலலிதாவை விமர்சித்து வெளியேறியவர். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற்றார். அந்த கட்சியையும் மறந்துவிட்டார். அதன் பிறகு தேமுதிகவுக்கு சென்று வெற்றிபெற்றார். அந்த கட்சியையும் படுக்கவைத்துவிட்டார், மூழ்கடித்துவிட்டார். இப்போது அதிமுகவுக்கு அறிவுரை சொல்கிறார். தயவுசெய்து உங்க அறிவுரை வேண்டாம். நல்லா இருக்கிறோம். அதிமுக நன்றாக இருக்கிறது. நீங்க எந்தெந்த கட்சிக்கு போய் அறிவுரை எல்லாம் சொன்னீர்களோ அந்த கட்சி எல்லாம் ஒன்னும் இல்லாமல் போய்விட்டது. அதனால் உங்களுடைய அறிவுரை எங்களுக்கு தேவையில்லை" என்று சாடினார் எடப்பாடி பழனிசாமி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in