சூழல் சுற்றுலா, சென்னை தாவரவியல் பூங்காவுக்கு ரூ.849.21 கோடி#TNBudget2022

சூழல் சுற்றுலா, சென்னை தாவரவியல் பூங்காவுக்கு ரூ.849.21 கோடி#TNBudget2022

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையில், வனம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து சொன்ன முக்கியமான அறிவிப்புகள் வருமாறு:-

தாவரவியல் பூங்காக்கள், பல்லுயிரினங்களின் இருப்பிடமாகவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாகவும் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு. லண்டன் க்யூபூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை அரசு உருவாக்கும். இந்நிதியத்தின் மூலம், வளர்ச்சி நிதி நிறுவனங்கள், பன்னாட்டு காலநிலை மாற்ற நிதியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திரட்டப்படும்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இளம்வயதில் இருந்தே வனம் மற்றும் வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகளைக்கொண்ட இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

வனப்பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்கள் வனவிலங்குகளுக்கு இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன்மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசுக்கு பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும்.

காடுகளும், எழில்மிகு சூழல் சுற்றுலாத் தலங்களும் நிறைந்தது தமிழ்நாடு. வனங்களுக்குப் பாதகமின்றி, சுற்றுச் சூழல் சுற்றுலாவை (எக்கோ டூரிஸம்) ஊக்குவிப்பது அரசின் கொள்கை. இதன் அடிப்படையில் சேத்துமடை (கோவை மாவட்டம்), மணவனூர், தடியன்குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். தங்குமிடங்கள் வனங்களைப் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் போன்ற பல வசதிகள் இத்தலங்களில் ஏற்படுத்தப்படும். இதில் கிடைக்கும் வருவாய் அப்பகுதியின் வளர்ச்சிக்கென பயன்படுத்தப்படும்.

மேற்கண்ட திட்டங்களுக்காக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in