விபத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மரணம்: துர்கா ஸ்டாலின் அஞ்சலிக்கு காரணம் இதுதான்!

விபத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மரணம்: துர்கா ஸ்டாலின் அஞ்சலிக்கு காரணம் இதுதான்!

தாய், மனைவிக்கு வீட்டிலேயே சிலை அமைத்துப் பிரபலமான ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் மறைந்த தனது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சி ஆகியோருக்கு வீட்டின் வாசலிலேயே சிலை அமைத்து வழிபட்டு வந்தார். இதன் மூலம் இப்பகுதி மக்களிடையே இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. மேலும் இவர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மாதம் 15-ம் தேதி தனது 73-வது பிறந்தநாளைத் தனது தாய் மற்றும் மனைவியின் சிலை முன்பு கொண்டாடினார். இந்நிலையில், நேற்று காலை மயிலாடுதுறையிலிருந்து தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்ற மதன்மோகன், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, மதன்மோகனின் உடல் மயிலாடுதுறையிலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவர் இறப்பைக் கேட்டு அதிர்ச்சியுற்ற துர்கா ஸ்டாலின் நேற்று மாலை மயிலாடுதுறையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், தமிழக அரசுக் கொறடா கோவி.செழியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in