`மதவாத அரசியலை முன்னெடுத்தவர்கள் வீழ்ந்தது வரலாறு'- துரை வைகோவிடம் கூறிய ராகுல் காந்தி

`மதவாத அரசியலை முன்னெடுத்தவர்கள் வீழ்ந்தது வரலாறு'- துரை வைகோவிடம் கூறிய ராகுல் காந்தி

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்திடன்  அவரது 'இந்திய ஒற்றுமை' நடைபயணத்தில் இன்று பங்கேற்றேன் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கங்களில்  துரை  வைகோ, 'குமரி முதல் காஷ்மீர் வரை, காங்கிரஸ் முன்னாள் தலைவர்,  சகோதரர் ராகுல்காந்தி  'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் செப்டம்பர் 7-ம் தேதி அன்று கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை, இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

இன்று ஹைதராபாத்தில் தொடங்கிய பயணத்தில் பங்கேற்று, நடைபயண நாயகர் இயக்கத் தந்தை அன்புத் தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும், மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பிலும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன்.  நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இந்த  சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து தந்தார். காலை 6 மணிக்கு தொடங்கி 8 மணி வரை , 2 மணிநேரம் ராகுல்காந்தியுடன் 9 கி.மீ நடைபயணமாக சென்றேன். அப்போது, கிட்டத்தட்ட அரை மணிநேரம் அவருடன் உரையாடினேன். அவருடன் காலை உணவருந்தினேன். 

அதன்பின்னர் அவருடன் 45 நிமிடங்கள் உரையாடிக்கொண்டு இருந்தேன். என்னைப் பற்றியும், நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு செய்துகொண்டு இருந்த பணிகளைப் பற்றியும் விசாரித்தார். வைகோவின்  உடல்நலன் குறித்தும் மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார். 

தமிழக அரசியல் நிலவரம், தேசிய அரசியல் உள்ளிட்டவைகள் குறித்து உரையாடினோம். தற்போது, உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தி வரும் வலதுசாரி அரசியலின் பேராபத்து  குறித்து, எனது கருத்தை அவரிடம் தெரிவித்தேன். வலதுசாரி அரசியலை வீழ்த்துவதற்கு நடைமுறையில் உள்ள சவால்கள் குறித்து நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். 

கடந்த பத்து வருடங்களில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்ததற்குப் பிறகு, வலதுசாரி அரசியல் கட்சிகள் வேகமாக வளர்ந்து உள்ளன. நம்மை பொருத்தவரை நாட்டின் முன்னேற்றம், ஒற்றுமை, வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வோம். ஆனால், வலதுசாரிகள் சாதி, மத உணர்வுகளை மக்களிடம் தூண்டி அதன் மூலம் வெற்றி பெறுகின்றார்கள்.  அவர்களை வீழ்த்துவது ஒரு சவாலான பணி என்று அவரிடம் தெரிவித்தேன்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே குறித்து பேச்சு எழுந்தபோது, அவர் மிக மோசமான கொடுங்கோலன் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். உடனே அவரிடம் கைகுலுக்கி அவரது கருத்தை நானும் ஆதரித்தேன்.

பிரேசில் தேர்தலில் போல்சார்னோவின் தோல்வி குறித்து எனது கருத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். உலகம் முழுவதும் ஹிட்லராக இருந்தாலும், ராஜபக்‌ஷேவாக இருந்தாலும், ட்ரம்பாக இருந்தாலும், போல்சார்னோவாக இருந்தாலும் வலதுசாரி சிந்தனை உடையவர்கள், இனவாத, மதவாத அரசியலை முன்னெடுத்தவர்கள் வீழ்ந்து போன வரலாறை சகோதரர் ராகுல்காந்தி  என்னிடம் தெரிவித்தார்.

இந்தியாவில் வலதுசாரிகளின் கை ஓங்கி இருந்தாலும் கடைசி நம்பிக்கையாக தகர்க்க முடியாத கற்கோட்டையாக தெற்கே தமிழகம் தான் இருக்கிறது என்று, ராகுல்காந்தி நம்பிக்கையுடன் தெரிவித்தார். தந்தை பெரியாரை போன்றே பகுத்தறிவு கருத்துக்களை அவர் காலத்திற்கு முன்பே பரப்பி வந்த சிந்தனையாளர்கள் குறித்தும் ராகுல்காந்தி பகிர்ந்து கொண்டார். அவரது முயற்சியும், நடைபயணத்தின் குறிக்கோளும் வெற்றி பெறட்டும்' என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in