நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கும் பிஹாரில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. எனினும், சட்டவிரோத மதுபானம் கடத்தல், கள்ளச்சாராயம் அருந்தியதால் மரணங்கள் என பிஹாரில் எதிர்மறையான சம்பவங்களும் நிகழ்ந்துவருகின்றன. இந்தச் சூழலில், மதுவிலக்கு சட்டத்தை முதல் முறையாக மீறுபவர்களுக்குக் குறைவான தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா நேற்று பிஹார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநில அரசு மதுவிலக்கைத் திறம்பட அமல்படுத்தாததால், கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. 2021-ம் ஆண்டின் கடைசி 6 மாதங்களில் மட்டும் கள்ளச்சாராயம் அருந்தியதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விஷயத்தில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மட்டுமல்லாமல், கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவும் நிதீஷ் அரசை விமர்சித்துவருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசிய நிதீஷ் குமார், “கள்ளச்சாராயம் அருந்துவது விஷம் அருந்துவதற்கு நிகரான ஆபத்தைக் கொண்டது எனத் தெரிந்தும் மக்கள் அதை அருந்துகின்றனர். அதற்கு அவர்கள்தான் பொறுப்பே தவிர, அரசு அல்ல” என்று கூறினார்.
மேலும், மது அருந்துவதை மகாத்மா காந்தி கண்டித்தார் எனக் கூறிய நிதீஷ் குமார், “காந்தியின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்படுபவர்கள் மகா பாவிகள், மகா அயோக்கியர்கள். அவர்களை நான் இந்தியர்களாகவே கருத மாட்டேன்” என்றார்.