ராஜீவ்காந்தி கொலை வழக்கு; விடுதலையான 4 பேர் திருச்சி முகாமிற்கு மாற்றம்: சீமான் கண்டனம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு; விடுதலையான 4 பேர் திருச்சி முகாமிற்கு மாற்றம்: சீமான் கண்டனம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேர் திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டதற்குச் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனைக் கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. இதையடுத்து அதே வழக்கில் சிறையில் இருக்கும் மற்ற கைதிகளாக நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களைச் சிறப்பு முகாமில் அடைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ 31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி ராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாது, ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களைச் சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக் கூடத்தில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது ” என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in