'’தமிழகத்தில் உள்ள சேரி பகுதிகளில் பாஜக நுழைய பார்க்கிறது. பாஜகவினர் கொடியேற்ற வந்தால் அதனை அனுமதிக்காதீர்கள்’’ என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மாத்தூர் பகுதியில் கட்சி நிர்வாகி சம்பத் தாயார் லட்சுமி படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் மேடையில் பேசுகையில், ‘’அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், அம்பேத்கர் வழியை பின்பற்ற அமைப்பாய் திரள்வோம். அடுத்தமுறை மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும்.
அதனால் அதனை தடுக்க வேண்டும். அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சேரிப் பகுதிகளில் பாஜக உள்நுழைய பார்க்கிறது. உங்கள் பகுதிகளில் அவர்களை கொடியேற்ற அனுமதிக்காதீர். அதிமுகவிற்கு ஆலோசனை சொல்வதற்கு நான் ஆலோசகர் இல்லை. அதிமுக முதுகில் பாஜக சவாரி செய்ய நினைக்கிறது. பாஜக தமிழகத்தில் வளர்ந்தால் அதிமுக நீர்த்து போய்விடும்.
திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் சேர உள்ளதாக சிலர் நெருப்பு அள்ளி வீசுகிறார்கள். என்னுடைய கொள்கை எல்லாம் பாஜக மீண்டும் ஆட்சிகட்டிலில் அமரக் கூடாது. அப்படி நடந்தால் அது அரசியலமைப்பு சட்டத்திற்கே ஆபத்தாக முடியும். மத்திய அரசு காஸ் விலையை ஏற்றிவிட்டது. 15 ஆயிரம் எங்கே என பலரும் போராடுகிறார்கள். அதுவல்ல என்னுடைய போராட்டம் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக எனது போராட்டம் தொடரும்’’ என்றார்.