பிரதமர் நரேந்திர மோடியை ராவணன் என்று அழைத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறவுள்ள குஜராத் தேர்தலுக்கு முன்னதாக அகமதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, "மோடி ஜி பிரதமர் வேலையை மறந்து கார்ப்பரேஷன் தேர்தல், எம்எல்ஏ தேர்தல், எம்பி தேர்தல் என எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்கிறார். மோடிக்கு வாக்களியுங்கள் என எல்லா இடத்திலும் கேட்கிறார்கள். உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறை பார்க்கிறோம்? உங்களுக்கு எத்தனை வடிவங்கள் உள்ளன? உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் உள்ளதா?.
ஒவ்வொரு தேர்தலிலும் பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லித்தான் வேட்பாளர்கள் ஓட்டு கேட்கிறார்கள். நகராட்சித் தேர்தலோ, மாநகராட்சித் தேர்தலோ, மாநிலத் தேர்தலோ... மோடிஜியின் பெயரில் ஓட்டு கேட்பதை நான் பார்த்து வருகிறேன். உங்கள் தேவையின் போது அவர் உங்களுக்கு உதவப் போகிறாரா?”என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக, மல்லிகார்ஜுன கார்கே ‘குஜராத்தின் மகனை பலமுறை அவமதிப்பதாக" குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி பேசிய பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான அமித் மாளவியா, "குஜராத் தேர்தல் சூடு தாங்க முடியாமல், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே, தனது வார்த்தைகளில் கட்டுப்பாட்டை இழந்து பிரதமர் நரேந்திர மோடியை ராவணன் என்று அழைக்கிறார். காங்கிரஸ் தொடர்ந்து குஜராத்தின் மகனை அவமதித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்