
’’2014, 2019 ஆகிய இரண்டு மக்களவைத் தேர்தலில் ஏமாந்தது போல் 2024 மக்களவைத் தேர்தலிலும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது. 2024 தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும்’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'ஸ்பீக்கிங் பார் இந்தியா' என்ற தலைப்பில் ஆடியோ பதிவு மூலம் தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் உரையாடி வருகிறார். அண்மையில் அவரது முதலாவது ஆடியோ உரை வெளியான நிலையில், இன்று 2-வது உரை வெளியாகி உள்ளது.
அதில்," எங்கள் முதல்வர் சொன்ன 1000 ரூபாய் வந்தாச்சு.. உங்க பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு என்று பதிவிட்டது வைரலாகி விட்டது. நம்முடைய நாடும் நாட்டு மக்களும் மீண்டும் பாஜகவிடம் ஏமாந்து விடக்கூடாது என்றுதான் இந்த பாட்காஸ்ட் சீரிஸ் தொடங்கியுள்ளேன். 2014-ம் ஆண்டு ஏமாந்தது போல, 2019-ம் ஆண்டு ஏமாந்தது போல 2024-ம் ஆண்டும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது.
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அங்கு தேனாறும் பாலாறும் ஓடுவது போல பொய் செய்திகளைப் பரப்பி மக்களை ஏமாற்றி பாஜக ஆட்சி வந்தது. எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள், நாட்டை வளர்ச்சி அடைய வைக்கிறோம் என்று சொன்னார் மோடி. அவருக்கு கூடுதலாக அடுத்த 60 மாதங்களும் மக்கள் கொடுத்து விட்டனர்.
வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றி விட்டாரா என்று மோடி பதில் சொல்ல வேண்டும். எந்த வகையில் எல்லாம் இந்தியாவை வளர்த்திருக்கிறார் என்று பட்டியல் போட முடியுமா? 5 டி தான் எனக்கு முக்கியம் என்று மோடி சொன்னார். திறமை, வர்த்தகம், பாரம்பரியம், டூரிஸம், டெக்னாலஜிதான் முக்கியம். இதில் ஒன்றாவது நிறைவேற்றியுள்ளாரா?" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் "என்னைப்பொருத்தவரைக்கும் பாஜக ஆட்சி 5 C கொண்டதாகத்தான் உள்ளது. கம்யூனலிசம், கரப்ஷன், கார்ப்பரேட் கேப்டலிசம், சீட்டிங், கேரக்டர் அசாசினேஷன் ஆகிய 5 C க்கள் கொண்ட ஆட்சியாக பாஜக உள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.