பிஹார் மாநிலத்தில் உள்ள மகாகத்பந்தன் அரசை முடிந்தால் கவிழ்த்து பாருங்கள் என்று பாஜக ராஜ்யசபா எம்பியும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடிக்கு நிதிஷ் குமார் சவால் விடுத்துள்ளார்.
நேற்று பிஹார் மாநிலம் கோபால்கஞ்சில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், ”மகாகத்பந்தன் அரசு அதன் பதவிக்காலத்தை முடிக்காது என்று சுஷில் மோடி கூறுகிறார். முடிந்தால் இந்த அரசை கவிழ்த்து மத்திய அரசிடம் வெகுமதி பெற அவர் முயற்சி எடுக்க வேண்டும். இப்போது மகாகத்பந்தன் அரசுக்கு எதிராக மோடி தினமும் பேசி வருகிறார். அதனால் பாஜகவின் மத்திய தலைமை மகிழ்ச்சியடைகிறது ”என்று அவர் கிண்டல் செய்தார்.
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று பேசிய சுஷில் மோடி, “ பிஹார் சட்டசபையில் அவத் பிஹாரி சவுத்ரி சபாநாயகராகிவிட்டதால், 45 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜனதா தளம் ஐக்கிய ஜனதா தளத்திற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது. லாலு பிரசாத் விரும்பும் போது, அவர் நிதிஷ்குமாரை மாற்றிவிட்டு, தனது மகனை மாநில முதல்வராக்குவார். பெரும்பான்மை உறுப்பினர்க்ள் ஆதரவுடன் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள்" என்று கூறினார்.
கடந்த மாதம் நிதிஷ் குமார் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தற்போது பிஹாரின் துணை முதல்வராக உள்ளார்.