நான் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது; ஸ்டாலின் முதல்வராகியிருக்க மாட்டார்: சீமான் சீற்றம்

சீமான்
சீமான்நான் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது; ஸ்டாலின் முதல்வராகியிருக்க மாட்டார்: சீமான் சீற்றம்

நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. இன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான். ஏனென்றால் 37 தொகுதிகளில் வெறும் 400, 500 வாக்குகளில் அதிமுக தோற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், " முன்னதாகவே இந்த தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம். தமிழ் நாட்டில் பிற மொழியாளர்களுக்கு இருக்கும் அரசியல் பாதுகாப்பு, அங்கீகாரம் கூட, ஆதி தமிழ் குடிகளான வண்ணார், குயவர், தச்சர், நாவிதர் போன்ற சமூகங்களுக்கு இல்லை. நாங்கள் வந்த பின்னர் தான் தேடித்தேடி அவர்களை தேர்தலில் நிற்க வைக்க வாய்ப்பு அளித்தோம். இவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டிய நிலை இருக்கிறது" என்று தெரிவித்தார்.

மேலும், "திமுக அரசு, காங்கிரஸ் கட்சிக்கு பயந்து கொண்டு முருகன், சாந்தன் உள்ளிட்ட நான்கு பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தயங்குகிறது. 35 ஆண்டு கால போராட்டம், சிறையில் இருந்து சிறப்பு முகாம் என்ற சித்திரவதை கூடத்தில் அடைப்பதற்காக அல்ல . சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக அவர்களை சிறையிலேயே மீண்டும் வைத்து விடுங்கள். அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் இருக்கிறது. இந்த நாலு பேர் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி வரும் 23ம் தேதி போராட்டம் நடைபெற இருக்கிறது" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் " நான் வாக்குகளை பிரிக்க வந்த ஆள் இல்லை. நாட்டை பிடிக்க வந்த ஆள். நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. இன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான். ஏனென்றால் 37 தொகுதிகளில் வெறும் 400, 500 வாக்குகளில் அதிமுக தோற்றது. அந்த தொகுதிகளில் நாங்கள் 18 ஆயிரம், 20 ஆயிரம் வாக்குகள் வாங்கினோம். அதற்காக நான் திமுகவின் பீ டீம் ஆகிவிடுவேனா?. இந்த தமிழ் தேசிய அரசியலில் நான் தான் ராஜா. நாங்கள் தான் நம்பர் ஒன்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in