மின்சார திருத்த சட்ட மசோதாவை திமுக தொடர்ந்து எதிர்க்கும்: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

மின்சார திருத்த சட்ட மசோதாவை திமுக தொடர்ந்து எதிர்க்கும்: அமைச்சர் செந்தில்பாலாஜி  உறுதி

மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் எழுப்பும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், " மின்சார திருத்த சட்டமசோதா நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழக முதல்வர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார். ஏழை மக்களை இந்த மசோதா பாதிக்கும். திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர் பாலு கடுமையாக இன்று மசோதாவை எதிர்த்து திமுகவின் குரலை பதிவு செய்துள்ளார்.
இந்த சட்ட மசோதா நிறைவேறினால் தனியார் துறைகள் மாநில அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாக பயன்படுத்திக்கொள்வார்கள். மேலும், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏற்படுத்திய தமிழ்நாடு அரசின் கட்டமைப்பை தனியார் துறை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம், விசைதிரி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம் குடிசையில் வசிப்போருக்கு வழங்கும் இலவசம் மின்சாரம் என அனைத்தும் இந்த மசோதாவால் பாதிக்கப்படும். மாநிலங்களுக்கு போடப்படும் அபராதத் தொகை 100 மடங்கு உயர்த்தப்பட உள்ளது.

ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மாற்றி அமைக்கும் வகையில் மசோதா உள்ளது. மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக, பாஜக இதுவரை எந்த எதிர்ப்புக் குரலையும் காட்டவில்லை. மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு காரணமே திமுக தான்.

இந்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக தொடர்ந்து குரல் எழுப்பும். மாநில அரசிற்கும், மின்சார வாரியத்திற்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் எந்த அதிகாரமும் இருக்காது. மின்சாரத் துறையை முழு தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. முதலாளிகள் கையில் சென்றால் ஏழை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என எந்த ஷரத்தும் மசோதாவில் இடம் பெறவில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in