`356-வது சட்டப்பிரிவை நோக்கி செல்கிறது திமுக ஆட்சி'- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

`356-வது சட்டப்பிரிவை நோக்கி செல்கிறது திமுக ஆட்சி'- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஐந்தாவது முறையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக ஆட்சியில் ஆளுநர் முதல் காவலர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தலையே சரியில்லாத நேரத்தில் வால் எப்படி சரியாக இருக்கும். தலை என்றால் முதல்வர் ஸ்டாலின், வால் என்றால் காவல்துறையினர்.

திமுக அரசானது இந்திய அரசியலமைப்பு சட்டம் 356ஐ நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும். அவர்கள் விசாரித்து உரிய நபர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தால் மட்டுமே லாக் அப் மரணங்கள் தடுக்கப்பட முடியும். போலீஸார் விசாரித்தால் அவர்களுக்கு ஆதரவாகத்தான் அமையும். திமுக அரசின் மக்கள் விரோத செயல் குறித்து அதன் தோழமை கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. இதை மக்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.

செயற்கையான மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு, மத்திய அரசின் மீது திமுக அரசு பழி போடுகிறது. 2,113 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. பொதுமக்களை இருட்டுக்குள் தள்ளி கஷ்டப்படுத்தும் இந்த பாவம் சும்மாவிடாது" என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி தனது காரை எடுத்துக்கொண்டு செல்லலாம். ஆனால் கமலாலயம் செல்ல வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு பதிலளித்த ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் அவரது காரை எடுத்துக்கொண்டு இலங்கைக்கு எடுத்து செல்லுமாறும், அங்கு 1.5 லட்சம் இலங்கை தமிழர்களின் ஆவி அவரை சும்மா விடாது எனவும் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in