
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் பாஜகவை குற்றம் சாட்டும் வகையில் 'தனக்குத்தானே வெடிகுண்டு திட்டம்' என்ற ஹாஷ்டேக்கை திமுகவினர் வைரல் செய்து வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது கடந்த 25ம் தேதியன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் மீது ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
இதனிடையே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திமுகவினர் மீது ஆளுநர் மாளிகையும் பாஜகவினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜக வழக்கறிஞர் என்பதால் அதை சுட்டிக்காட்டி இந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது திமுக குற்றம்சாட்டுகிறது. சபாநாயகர் அப்பாவு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் வெளிப்படையாகவே இது குறித்து பேசி உள்ளனர். இந்த நிலையில் திமுக ஐடி விங்க் சார்பில் 'தனக்குத்தானே வெடிகுண்டு திட்டம்' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.