
திமுக பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருத்தணியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ.நகரில் வசித்து வந்தவர் மோகன். திமுக பிரமுகரான இவர், நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 3 பேர் அவரை பின்தொடர்ந்துள்ளனர். இதை மோகன் கவனிக்கவில்லை. மறைவான பகுதியில் மோகன் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தினர். ரத்த வெள்ளத்தில் மோகன் கீழே சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மோகனை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருத்தணியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காவல்துறையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.