அமைச்சர் நேரு மீது கடும் விமர்சனம்; காவல்துறையில் அடுத்தடுத்து புகார்: கைதாவாரா திருச்சி சிவா மகன்?

அமைச்சர் நேரு மீது கடும் விமர்சனம்; காவல்துறையில் அடுத்தடுத்து புகார்: கைதாவாரா திருச்சி சிவா மகன்?

திமுகவின் முக்கிய பிரமுகரான திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் மாநில ஓபிசி பிரிவு செயலாளருமான சூர்யா சிவா மீது திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.

சூர்யா சிவா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவைப் பற்றி விமர்சனம் செய்து பேசியதோடு அமைச்சரின் தம்பி மறைந்த ராமஜெயம் குறித்தும் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

மறைந்த தொழிலதிபர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது விசாரணையில் இருந்தாலும் குற்றவாளிகளை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. கொலை செய்தவரை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தரும் அளவிற்கு ராமஜெயம் தியாகி அல்ல என்றும் பேசியுள்ளார். மேலும் மறைந்த ராமஜெயம் அடாவடியானவர் என்றும் அவருடைய வளர்ச்சியில்தான் தற்போது அமைச்சர் கே.என்.நேரு வாழ்ந்து வருகிறார் என்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக நேருவின் ஆதரவாளர்கள் இதனால் கொந்தளித்து போயுள்ளனர். சூர்யாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் சென்ற தொழில்நுட்ப பிரிவு அணியினர், மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் இதுகுறித்து இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

சூர்யா சிவா
சூர்யா சிவா

அதில், ``ஏற்கெனவே தன்னிடம் பணியாற்றிய கார் ஓட்டுநருக்கு முறையான சம்பளம் வழங்காமல் இருந்ததாகவும், அதை கேட்கச்சென்றவரை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியிருப்பது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கின்றது. எனவே, பாஜக பிரமுகர் சூர்யா சிவா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களைத் தொடர்ந்து சமூக நீதி பேரவை அமைப்பின் சார்பிலும் சூர்யா மீது மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ``சூர்யா சிவா மதக் கலவரத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேச்சாலும் செயல்பாடுகளாலும் மற்றவர்களை தூண்டி விடுவதாக குற்றம்சாட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. இதனால் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யா சிவா மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்று மேலும் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது சூர்யாவுக்கான நெருக்கடியை அதிகரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in