'நோட்டா கிட்ட வச்சுக்கோ....எங்க ஏட்டா கிட்ட வேண்டா': அமைச்சரை சீண்டிய பாஜகவிற்கு திமுக பதிலடி

'நோட்டா கிட்ட வச்சுக்கோ....எங்க ஏட்டா கிட்ட வேண்டா':  அமைச்சரை சீண்டிய பாஜகவிற்கு திமுக பதிலடி

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கேலி செய்து கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கோவை முழுவதும் திமுகவினர் பாஜகவை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டிவருகிறார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அறிக்கை போர் ஏற்பட்டு, சமீபகாலமாக இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். மின்சாரக் கட்டண உயர்வு, மின்துறை ஊழல் என இரு தரப்பினரும் அடிக்கடி பேட்டி கொடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கேலி செய்யும் விதமாக போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். 5000 கோடிக்கு அதிபதியாக்கிய BGR ஊழல் எனக்குறிப்பிட்டு ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் தராசு தட்டில் கட்டுக்கட்டாகப் பணத்திற்கு ஈடாகச் செந்தில் பாலாஜியை தொங்க விட்டுள்ளார்கள். செந்தில் பாலாஜி கோட்டையான கரூரில் அவரது இமேஜை டேமேஜ் ஆக்கும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டருக்கு பதிலடி கொடுக்க திமுக களம் இறங்கியுள்ளது.

கோவையில் பலமாக உள்ள பாஜகவை விமர்சிக்கும் வகையில் திமுகவும் போஸ்டர் யுத்தத்தைத் தொடங்கியுள்ளது. கோவை கிழக்கு மாவட்ட திமுகவினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பாஜகவை விமர்சனம் செய்யும் விதமாக போஸ்டர்களை ஒட்டிவருகிறார்கள். அதில், , ‘நோட்டா கிட்ட வச்சுக்கோ.... எங்க ஏட்டா கிட்ட வேண்டா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே திமுக போஸ்டர்கள் தொடர்பாக பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் இருகட்சியினருக்கும் போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in