
ஆளும் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவியை திரும்ப பெறக்கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் அடுத்தடுத்து போராட்டம் அறிவித்துள்ளதால் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது உரையில் சில பகுதிகளை பேசாமல் தவிர்த்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியதால் அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை திட்டமிட்டுள்ளனர். திமுக கூட்டணிக் கட்சியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் சார்பில் வரும் 13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது. அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிண்டி உதவி ஆணையர் சிவா தலைமையில் வேளச்சேரி ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது ஆர்.என்.ரவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.