பாலியல் வழக்கில் எச்.டி.குமாரசாமியையும் சேர்க்க ரூ.100 கோடி பேரம்: கர்நாடக துணை முதல்வர், 4 அமைச்சர்கள் மீது பகீர் குற்றச்சாட்டு

கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி
கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி
Updated on
2 min read

கர்நாடகாவில் பாலியல் வழக்கில் எச்.டி.குமாரசாமி மீது குற்றச்சாட்டுகளை எழுப்ப, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தன்னிடம் ரூ.100 கோடி பேரம் பேசியதாக வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், ஹசன் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள அவரை கைது செய்ய அம்மாநில போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிரஜ்வல் ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா

பிரஜ்வல் ரேவண்ணா, விவகாரத்தில் அவரது தந்தையும் உடந்தையாக இருந்ததாக புகார்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இவர்கள் மீது புகார் அளித்த பெண்ணை கடத்திய வழக்கில் பிரஜ்வல் தந்தையான எச்.டி.ரேவண்ணா சமீபத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த பாலியல் விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சித்தப்பாவும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமியையும் சிக்க வைக்க, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தன்னிடம் ரூ.100 கோடி பேரம் பேசியதாக வழக்கறிஞரும் பாஜக தலைவருமான ஜி. தேவராஜே கவுடா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

இந்த வழக்கின் பின்னணியில் எச்.டி.குமாரசாமி இருப்பதாகக் காட்ட, டி.கே.சிவகுமார் எனக்கு ரூ.100 கோடி வழங்க முன் வந்தார்.

கர்நாடகா துணை முதலவர் டி.கே.சிவகுமார்
கர்நாடகா துணை முதலவர் டி.கே.சிவகுமார்

அமைச்சர்களான என். சாளுவராயசுவாமி, கிருஷ்ணா பைரே கவுடா, பிரியங்க் கார்கே மற்றும் மற்றொரு அமைச்சர் மூலம் இந்த பேரத்தை பேசினர். அவர்கள் 'பவ்ரிங் கிளப்'-க்கு ரூ.5 கோடி முன்தொகையையும் ஏற்கெனவே அனுப்பிவிட்டனர். ஆனால் நான் சம்மதிக்கவில்லை. எனவே, அவர்கள் என்னை சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டினர்.

டி.கே.சிவகுமார் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக்கிடமிருந்து அனைத்து தகவல்களையும் சேகரித்து பென் டிரைவை தயார் செய்தார்.

இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நான் அந்த திட்டத்துக்கு உடன்படவில்லை. அவர்கள் பாஜக, நரேந்திர மோடி, எச்.டி.குமாரசாமிக்கு அவப்பெயரை ஏற்படுத்த திட்டமிட்டனர்.

ஜி. தேவராஜே கவுடா
ஜி. தேவராஜே கவுடா

அவர்கள் என் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்கார வழக்கை பதிவு செய்தனர். ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இப்போது, அவர்கள் என்னை பென் டிரைவ் வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்” என்று ஜி. தேவராஜே கவுடா கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in