திமுக மேயருக்கு எதிராக திமுக மாவட்டச் செயலாளர்?
திருநெல்வேலியில் மாநகராட்சி இப்போது திமுக வசம் இருக்கிறது. ஆனால், திமுக கவுன்சிலர்கள் தான் மேயருக்கு எதிராக நிற்கிறார்கள். நேற்றைய மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் சிலரே மேயர் சரவணனுக்கு எதிராக கமிஷன் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசினர். இன்னும் சில திமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் எந்த வேலையும் நடக்கவில்லை என்று சொல்லி மேயர் சரவணனை முற்றுகையிடாத குறையாக மிரளவைத்தனர்.
இந்தக் களேபரக் காட்சிகளின் பின்னணியில் பாளையங்கோட்டை எம்எல்ஏ-வும் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளருமான அப்துல் வகாப் இருப்பதாகச் சொல்கிறார்கள். தனக்குக் கட்டுப்பட்டு இருப்பார் என்று தான் சரவணனை மேயர் வேட்பாளராக தலைமைக்கு பரிந்துரைத்தாராம் வகாப். ஆனால் சரவணன், மேயர் இருக்கையில் அமர்ந்ததும் ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது போல் நடக்க ஆரம்பித்துவிட்டாராம். சரவணனின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் கொதித்துக் கிடக்கும் வகாப்பும் அவரது ஆதரவு வட்டமும் தான் இப்போது மாமன்றத்தில் சரவணனின் சீரைக் கெடுக்கிறார்களாம்!