`இடையீட்டு மனுத் தாக்கல் செய்ய ஈபிஎஸ்ஸுக்கு உரிமையில்லை; தள்ளுபடி செய்யவும்'- ஓபிஎஸ் பதில் மனு

ஈபிஎஸ் - ஓபிஎஸ்
ஈபிஎஸ் - ஓபிஎஸ் `இடையீட்டு மனுத் தாக்கல் செய்ய ஈபிஎஸ்ஸுக்கு உரிமையில்லை; தள்ளுபடி செய்யவும்'- ஓபிஎஸ் பதில் மனு

அதிமுக பிரதிநிதி என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை என்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருந்து வந்த நிலையில் அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவின் பொதுக்குழு கூடி அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்து தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்களது தரப்பு சார்பாக வேட்பாளரை தனியாக நிறுத்த விரும்புகிறோம். ஆனால் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை வேட்பாளர் படிவத்தில் போடுவதற்கு மற்றும் கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. அதனால் இதுதொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தையும் எங்களது தரப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், "எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அதிமுக பிரதிநிதி என்ற முறையில் பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை. பொதுக்குழு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் பழனிசாமியின் இடையீட்டு மனுவை ஏற்கக்கூடாது. அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in