தெலங்கானாவிலிருந்து என்னை விட்டினார்களா?: தமிழிசை சௌந்தரராஜன் கொந்தளிப்பு

தெலங்கானாவிலிருந்து என்னை  விட்டினார்களா?: தமிழிசை சௌந்தரராஜன் கொந்தளிப்பு

தெலங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். யாரும் என்னை அங்கிருந்து விரட்டவில்லை என்று புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரட்டை ஆட்சி நடத்துவதாகவும், தெலங்கானாவில் அவரால் மக்களை நேரடியாக சந்தித்து குறைகேட்க முடியுமா என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அவருக்கு தமிழிசை சௌந்தரராஜன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், " பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் அவர்கள் எந்த துறையில், எந்த பதவியில் இருந்தாலும் மக்கள்சேவைதான் பிரதான பணி என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. புதுவை தலைமை செயலாளரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன். அரசு செயலாளர்கள், கலெக்டர்கள், துறை தலைவர்கள் என்று அனைத்து அதிகாரிகளும் அலுவலக பணிகளை விடுத்து மக்களைச் சந்திக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மக்களின் குறைகளைக் கேட்கவேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

இதற்கான சுற்றறிக்கை அனுப்பக் கேட்டுள்ளேன். அதற்கு அவரும் இசைவு தெரிவித்துள்ளார். அதேபோல நானும் என்னைச் சந்திக்க விரும்பி முன்பதிவு செய்யும் பலரையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால், மின்னஞ்சல் போன்றவை மூலமாக தொடர்புகொள்ள முடியாதவர்கள் குறிப்பிட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டால் நாங்கள் தங்களை சந்திக்க வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டதால் மக்களை சந்திக்க மாதத்தில் இரண்டு நாட்கள் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன்.

இது யாருடைய அதிகாரத்திலும் தலையிடுவதாக ஆகாது. மக்களைச் சந்திக்கும் பழக்கம் எனக்கு நெடுநாட்களாகவே இருந்து வருகிறது. தெலங்கானா மாநிலத்திலும் நான் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். மாணவர்களையும், பெண்களையும் சந்திப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன்.

நான் பதவியேற்ற முதல் வாரத்திலேயே 'பிரஜா தர்பார்' என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவேன் என்று அறிவித்தேன். இது யாருடைய, எந்த நிகழ்வின் தொடர்ச்சியும் அல்ல. நானே முடிவெடுத்து சந்தித்து வருகிறேன். தெலங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கூறியதைப்போல் அங்கு யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அங்கு என்னுடைய பணி தீவிரமாகவே இருக்கிறது. இந்த கடிதத்தோடு தெலங்கானா மாநிலத்தில் நான் மூன்றாம் ஆண்டில் செய்த அன்றாட பணிகளைப் பற்றிய 498 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தங்களது பார்வைக்கு அனுப்பியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in