
நாகர்கோவிலில் நேற்று இரவு நடந்த திமுக இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜகவினரைக் குறித்து, மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் பேசும்போது செய்த செய்கை இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இவ்விசயத்தைக் கையில் எடுத்து பாஜகவும் குரல் கொடுத்துவருகிறது.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயருமான மகேஷ் தலைமை வகித்தார். இதில் தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு பேசினார். இந்த மேடையில் மேயர் மகேஷ் பேசும்போது, “நான் மேயராகவும், மாவட்ட செயலாளர் ஆகவும் இருக்கும் மாவட்டத்தில் திமுகவினர் நிகழ்ச்சியை நடத்தும்போது ஊறுவிளைவிக்க வேண்டும் என நினைத்து பாஜகவை சேர்ந்தவர்கள் கொடியையோ, தலையையோ நீட்டினால் எனச் சொல்லிக்கொண்டு தன் கைகளை, கழுத்து அருகே கொண்டு சென்று ஒருவித செய்கை செய்துவிட்டு புரிந்துகொள் எனப் பேசினார்.
தொடர்ந்து அதை செய்வதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். 32 வருடமாக வழக்கறிஞர் தொழிலை நடத்துகிறோம்” எனவும் பேசினார். முன்னதாக இந்தக் கூட்டத்திற்கு பாஜகவினர் ஊறுவிளைவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவரும் நிலையில், பாஜகவின் நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.