சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்த ஒருவராவது உயிரிழந்தாரா? - சித்தராமையா கேள்வி
சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த யாராவது இறந்தார்களா?. ஆர்எஸ்எஸ் பல சமயங்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்தது உண்மைதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு தினத்தையொட்டி, கர்நாடக காங்கிரஸ் பெங்களூருவில் அரசியலமைப்பு தின அணிவகுப்பு நடத்தியது. இந்த நிகழ்வில் பேசிய சித்தராமையா, “பாஜக அரசு ஒருபோதும் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டிற்காக பாடுபடவில்லை. அவர்களின் ஆட்சியில் ஒரு சில சாதனைகளையாவது சொல்ல முடியுமா. அவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்தார்கள், அவர்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள். மாநிலத்தில் மண்டல் கமிஷன் முறையை எதிர்த்தனர். பாஜக சமூக நீதிக்கு ஆதரவாக எப்போதும் இருந்ததில்லை" என்று தெரிவித்தார்
மேலும், “சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஒருபோதும் பங்களிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாராவது இறந்தார்களா?. ஆர்எஸ்எஸ் பல சமயங்களில் பிரிட்டிஷ் அரசுக்கு சாதகமாக இருந்தது உண்மைதான். அவர்கள் அப்போது ஒன்றாக வேலை செய்தனர்” என்று கூறினார்.