அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக்கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதை குறிப்பிட்டு நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் சபாநாயகரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே அவை காவலர்கள் மூலம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நடைபெறும் ஜனநாயக படுகொலை மற்றும் சபாநாயகரை கண்டிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நேற்று காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதனிடையே, சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதாலும், சட்டம், ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டியும் அதிமுகவினர் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் போலீஸாரின் உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கைது நடவடிக்கை பாயும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் நடைபெறும் பகுதியான வள்ளுவர் கோட்டத்தில் நேற்று இரவு முதல் போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.