திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று திமுக எம்.பிக்கள் கருப்பு நிற முகக்கவசத்துடன் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனர்.
‘ஜனநாயக படுகொலை’ என்ற வாசகம் அடங்கிய கருப்பு நிற முகக்கவசத்தை அணிந்து திருச்சி சிவா, ராஜேஷ் குமார் உள்ளிட்ட அனைத்து திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர்கள், ‘ நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரிக்கை வைத்தோம். ஆனால் எங்களின் குரல்வளையை நெறிக்கும் வகையில் 6 திமுக உறுப்பினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை” என்று தெரிவித்தனர்.
மேலும், எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்
மழைக்கால கூட்டத்தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டதற்காகவும், அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாகவும் 6 திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட 19 பேரை ஒரு வார காலத்துக்கு இடைநீக்கம் செய்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நேற்று அறிவித்தார்.