சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பேசியதால் தனக்கு அவரது ஆதரவாளர்கள் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஈபிஎஸ் ஆதரவு அரக்கோணம் எம்எல்ஏ ரவி புகார் அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் மூன்றாவது முறையாக நேற்று நிறைவேற்றப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ்ஸுக்கு , பேரவை தலைவர் அப்பாவு இது தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பளித்தார். இதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியனுக்கும், அதிமுக எம்எல்ஏக்கள் அருண்குமார், கோவிந்தராஜ், அரக்கோணம் ரவி ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்காரணமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் தான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக அரக்கோணம் எம்எல்ஏ ரவி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் தனது தொகுதி சார்ந்த மக்களின் அழைப்பைக் கூட ஏற்க முடியாத நெருக்கடியான நிலையில் தான் உள்ளதாகவும் போலீஸார் முறையாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரக்கோணம் எம்எல்ஏ ரவி புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இதுத்தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.