"பொய் வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சிக்கு கூடிய விரைவில் ஆபத்து ஏற்படும்' என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது கடும் சுமையை சுமத்தி உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடும் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஏன் இந்த விலைவாசி உயர்வைக் கண்டித்து போராடவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
"தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்த திமுக ஒரு தீய சக்தி. தற்போது வரை திமுக மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. அது அவர்களது ஆட்சிக்கு கூடிய விரைவில் ஆபத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.