பொன்முடி மகனுக்குப் பொறுப்பு கொடுத்தது எப்படி? - சி.வி.சண்முகம் காட்டம்

பொன்முடி மகனுக்குப் பொறுப்பு கொடுத்தது எப்படி? - சி.வி.சண்முகம் காட்டம்

அமித்ஷா மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் பதவியைக் கொடுத்த போது எதிர்ப்புக் கிளப்பிய திமுகவினர், பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுத்த போது வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 51-வது தொடக்கவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், வானூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், ”தமிழ்நாட்டில் பால் விலை ஒரே நாளில் 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 40 சதவிகித அளவிற்குப் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தானும், தன் குடும்பமும் வாழ வேண்டும் என முதல்வர் கனவு காண்கிறார். அமித்ஷா மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் பதவியைக் கொடுத்த போது அதற்கு திமுகவினர் எதிர்ப்பு கிளப்பினர். இப்போது பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள் எனக் கேள்வி எழுப்பினால், அதற்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.

அதுபோல் கோவை குண்டுவெடிப்பைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று வரை வாய் திறக்கவே இல்லை. முதல்வரின் மௌனம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழக அரசு செயல்படாமல் இருப்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினால், உடனடியாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று அவருக்கு மிரட்டல் விடுக்கும் வேலைகளைச் செய்கிறார்கள். இதன் மூலம் திமுக அரசு தன்னுடைய கையாலாகாத தனத்தை வெளிப்படையாகக் காட்டி வருகிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in