சிஆர்பிஎப் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்சிஆர்பிஎப் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சிஆர்பிஎப் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்தக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சிஆர்பிஎப் தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ சிஆர்பிஎப்-பில் 9212 காவலர்களுக்கான ஆட்சேர்க்கையில் தங்களின் கனிவான கவனத்தைக் கோருகிறேன். நமது அரசமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் போதிலும், சிஆர்பிஎப் கணிணித் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9212 காலிபணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. ஆனால் சொந்த மாநிலத்திலேயே தாய்மொழியில் தேர்வை எழுதமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மற்றொரு மறைமுக அம்சமாக, இந்த தேர்வில் மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழியில் அடிப்படை புரிதலுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது, எனவே இது இந்தி மொழியில் தேர்வெழுதுபவர்களுக்கே சாதகமாக அமையும். மத்திய ரிசர்வ் காவல் படையின் இந்த அறிவிக்கை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்தோரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. இந்த அறிவிப்பு முற்றிலும் தன்னிச்சையானது மற்றும் பாகுபாடானது.

விருப்பு வெறுப்பின்றி இந்த அறிவிக்கையை நோக்குகையில், இது தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போருக்கு எதிரான பாகுபாட்டுடனும், அவர்கள் நாட்டின் துணை ராணுவப் படையில் பணியாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தாங்கள் இதில் உடனே தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சிஆர்பிஎப்-பில் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில் இந்த பணிக்கான கணிணித் தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களை செய்ய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in