மகாராஷ்ராவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவையில் 75 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சிர்த்திருத்தங்களுக்கான சங்கம் அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்ராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. இதில் முதல்வர் உள்பட 20 அமைச்சர்கள் உள்ளனர். இந்த வாரம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
புதிதாக பொறுப்பேற்ற 18 புதிய அமைச்சர்களில் தலா 9 பேர் ஷிண்டேவின் சிவசேனா, மீதி 9 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர், துணை முதல்வர் உள்பட 20 அமைச்சர்களில் 15 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளர் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) அறிக்கை கூறியுள்ளது.
மேலும், அனைத்து அமைச்சர்களும் பல கோடி சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர்கள், அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.47.45 கோடி என அந்த அறிக்கை கூறுகிறது. அமைச்சர்களில் 75 சதவீதம் பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை கொண்டுள்ளனர் என்று ஏடிஆர் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து அமைச்சர்களின் சுய பிரமாணப் பத்திரங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்படி, 15 (75 சதவீதம்) அமைச்சர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளையும், 13 (65 சதவீதம்) பேர் தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகளையும் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவல் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.