அவ்வளவுதானா எதிர்க்கட்சிகளின் கூட்டணி?: துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தார் மம்தா!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்கப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தங்காரை துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக தனது கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கார்நாடகாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் பெண் தலைவர் மார்கரெட் ஆல்வா களம் இறங்கியுள்ளார். ஆனால் இந்த தேர்தலில் வாக்களிக்காமல் விலகியிருக்கப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது எதிர்க்கட்சிகளின் முகாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் 17 எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து தனது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நிறுத்தினார் மம்தா பானர்ஜி. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்த சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை பாஜக வேட்பாளரை ஆதரித்தன. அதேபோல பல எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்தனர். இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருக்கிறார் மம்தா பானர்ஜி.

இந்த நிலையில்தான் திரிணாமுல் காங்கிரஸை ஆலோசிக்காமல் எதிர்க்கட்சி வேட்பாளர் முடிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களுடன் வியாழன் அன்று நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிhindu கோப்பு படம்

மேலும், மம்தா பானர்ஜியுடன் கலந்தாலோசிக்காமல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை எப்படி அறிவிக்கலாம் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் இந்த முடிவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இது ஈகோ அல்லது கோபத்திற்கான நேரம் அல்ல. தைரியம், தலைமைத்துவம் மற்றும் ஒற்றுமைக்கான நேரம் . தைரியத்தின் உருவகமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளுடன் நிற்பார் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in