ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு?: 8 மணிக்கு தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு?: 8 மணிக்கு தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

தமிழக அரசியல் கட்சிகளும்,  பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டுமணிக்கு தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததை முன்னிட்டு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு  வாக்குப்பதிவு கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசுவும் பிரதான வேட்பாளராக களத்தில் நின்றனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மேனகா,  தேமுதிக வேட்பாளர்  ஆனந்த் ஆகியோரும் இந்த கட்சிகளுக்கு இணையாக நின்று  களமாடினர்.  

வாக்குப்பதிவுக்காக  238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 286 முதன்மை அலுவலர்கள், 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 62 அலுவலர்கள் என மொத்தம் 1,206 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 

இந்த இடைத்தேர்தலில் 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர்.இது 74.79 சதவீத வாக்குப்பதிவாகும். 

வாக்குப்பதிவு இயந்திரங்கள்  அனைத்தும்  வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரிக்குக் கொண்டு  வரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியது.  இத்தேர்தலில், 77 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால் வாக்கு  எண்ணிக்கையின்போது காலதாமதத்தைத் தவிர்க்க 2 அறைகளில் வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, தரைத்தளத்தில் உள்ள அறையில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் உள்ள அறையில் 6 மேஜைகளும் என மொத்தம் 16 மேஜைகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதைத்தொடர்ந்து, இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். மதியத்துக்குள்  முழு முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார்வையாளர் உள்பட 3 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.  

வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in