
'கொரோனா தடுப்பூசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதால் அரசு மருத்துவமனைகளில் கொரோனோ தடுப்பூசி இருப்பு இல்லை' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 1 முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கபட்டுள்ளது. அவை உள்ளிட்ட அவசிய வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என, மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பொதுப்பிரிவு போன்ற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு நிறுத்தி விட்டது. மேலும் கையிருப்பில் இருந்தவற்றை மாநில அரசுகளுக்கு அனுப்புவதையும் நிறுத்தி விட்டது. இதனால் கொரானோ தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போன்றவை தமிழக அரசு மருத்துவமனைகளில் இருப்பு இல்லை. எனவே பொதுமக்களில் தேவைப்படுவோர், தனியார் மருத்துவமனையில் இருப்பு இருந்தால் அதனை போட்டுக்கொள்ளலாம்.
வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளில் தற்போது 2% ரேண்டம் பரிசோதனை மட்டுமே செய்கின்றனர். அதில் நாள் ஒன்றிற்கு 8 முதல் 10 கொரோனோ பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அனைவரையும் பரிசோதிக்கும் வகையில் இதுவரை மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை.
தமிழகத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றல் 90 சதவிகிதம் உள்ளதால் இங்கு இதுவரை பெரிய பாதிப்பு இல்லை. அதே சமயத்தில் தேவையான அளவிற்கு கொரானோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. கொரானோ பாதிப்பு அதிகரித்தாலும் ஊரடங்குக்கான தேவை என்பது வராது’’ என்றார்.