விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி, கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால் பாஜகவுக்கு மாறப் போகிறார் என்ற செய்தி வேகமாக பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டும் கூட முதல் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. அதனால் அவர் அப்போது கடும் அதிருப்தியில் இருந்தார். அவர் கட்சி மாறப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், மீண்டும் அவரே காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அத்துடன் இந்தப் பிரச்சினை ஓய்ந்தது.
கட்சிப் பணிகளில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்த இவர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உறுப்பினராக இருந்த வசந்த குமார் மரணம் அடைந்ததை தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் தனக்கு சீட்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனால் அப்போது முதல் கட்சி தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருந்து வருகிறார். எப்போதும் பரபரப்பாக இயங்கும் அவர் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இந்தமுறை தனக்குச் சீட்டு வழங்க வேண்டும் என்று அழுத்தமாக அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், திமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுமா? அப்படியே வழங்கினாலும் விஜயதாரணிக்கு அந்த சீட்டு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைமையோடு சிட்டிங் எம்.பியான விஜய் வசந்த் நல்ல நட்போடு இருந்து வருகிறார். எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கவும் அவர் தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் விஜய் வசந்தே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில தேர்தல்களில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸில் சீட்டு கேட்டு வரும் விஜயதாரணி இந்த முறை கண்டிப்பாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டே தீர வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்காக பாஜகவில் பேரம் பேசி வருவதாகவும், அதற்கு அக்கட்சி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் கன்னியாகுமரி, பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனின் விருப்பமான தொகுதியாகும். அவர் அங்கு பலமுறை போட்டியிட்டிருக்கிறார். ஒருமுறை வெற்றியும் பெற்று இருக்கிறார்.
இந்நிலையில் அவரை விடுத்து வேறு யாருக்கும் சீட்டு வழங்குவது என்பது தற்போது பாஜகவில் இயலாத காரியமாக உள்ளது. ஆனாலும், புதியவர் ஒருவரை களமிறக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாகவும் அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜயதாரணி பாஜகவில் இணைகிறார் என்பதும், அவரே பாஜக வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் நிறுத்தப்படுவார் என்பதுவும் முற்றிலும் பொய்யான செய்தி என்றும், ஒவ்வொரு தேர்தலின்போதும் இவ்வாறான வதந்திகள் ரெக்கை கட்டிப் பறக்கும் என்பதையும் கன்னியாகுமரிவாசிகள் சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!
அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!
நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!
‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!
கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!