
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர், பாரத ராஷ்ட்ர சமிதியில் இணைந்துள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்திற்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆளும் கட்சியான பாரத ராஷ்ட்ர சமிதி, வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் அறிவித்த முதல்கட்ட பட்டியலில் மூத்த தலைவர்கள் பலரது பெயர்களும் இடம்பெறவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.
குறிப்பாக 10 நாட்களுக்கு மேலாக டெல்லியில் முகாமிட்டு வாய்ப்பு எதிர்பார்த்து இருந்த, ஒருங்கிணைந்த ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் தெலங்கானா மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பொன்னல லஷ்மைய்யாவிற்கு, சீட் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்து பேசி இருந்தார். இதை தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாக பிஆர்எஸ் கட்சியில் லஷ்மைய்யா இணைந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.