ராகுல் காந்தி யாத்திரையில் நீங்கள் பங்கேற்க வேண்டும்: சரத்பவார், உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து காங்கிரஸ் அழைப்பு

ராகுல் காந்தி யாத்திரையில் நீங்கள் பங்கேற்க வேண்டும்: சரத்பவார், உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து காங்கிரஸ் அழைப்பு

ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே ஆகியோர் பங்கேற்க வேண்டும் என்று அவர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தி வருகிறார். செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா வழியாக கர்நாடகாவிற்குள் நுழைந்து ஆந்திரா வழியாக நவ.7-ம் தேதி மகாராஷ்டிராவிற்குள் நுழைகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் யாத்திரையை ஒருங்கிணைக்கும் குழுவில், அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஹெச்.கே.பாட்டீல், முன்னாள் முதல்வர் அசோக் சவான், முன்னாள் தலைவர் பாலாசாகேப் தோரட், மும்பை காங்கிரஸின் தலைவர் பாய் ஜகதாப் மற்றும் கட்சி பிரமுகர்கள் விஸ்வஜித் கதாம் அமர் ராஜூர்கர், நசீம் கான் சந்தீப் தம்பே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் நடைபெற இருக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே ஆகியோரை கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதற்தாக காங்கிரஸ் பிரமுகர்கள், உத்தவ் தாக்கரேவை அவரது மடோஸ்ரீ இல்லத்திலும், சரத்பவாரை யஷ்வந்த்ரோ சவான் பிரதிஷ்தானிலும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த மகாவிஹாஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸும், உத்தவ் தலைமையிலான சிவசேனா அணியும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in