தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை குற்றம்சாட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இன்று தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ். கோவில்பட்டியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உள்கட்சித் தேர்தல் காங்கிரஸில் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. மாவட்டத் தலைவர்களுக்குத் தெரியாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சினை தொடர்பாக மாவட்டத் தலைவர்களிடம் உரிய ஆலோசனை நடத்தப்படவில்லை. நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனை தன்னிச்சையாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நீக்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை. கட்சியின் வளர்ச்சி குறித்துத் தொண்டர்கள் பேசினால் கட்சி அலுவலகத்தில் வைத்தே அடிக்கும் நிலை உள்ளது. இதனால், கே,எஸ் அழகிரியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் ”என்றார்.