சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான என்கவுன்ட்டரில் 29 நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியில் பல அப்பாவி கிராம மக்கள் நக்சல்கள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், காங்கேர் மாவட்டம், பினா குண்டா மற்றும் கொரோனோர் கிராமங்களுக்கு இடையே எல்லை பாதுகாப்புப் படையினர், போலீஸ் சிறப்பு படையினர் அடங்கிய குழுவினருக்கும், நக்சலைட்களுக்கும் ஹபடோலா காட்டுப்பகுதியில் நேற்று துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் குழுவால் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல், பாதுகாப்பு படையினர் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பாஜக ஆட்சியில் பல அப்பாவி கிராம மக்கள் நக்சல்கள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடந்த 5 ஆண்டுகளில் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் அரசு திறம்பட நடவடிக்கை எடுத்துள்ளது.
எங்கள் ஆட்சியில் நடக்காத பல போலி என்கவுன்டர்கள் பாஜக ஆட்சியில் நடந்துள்ளன. அவர்களின் ஆட்சியில் பல போலி கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 4 மாதங்களாக பாஜக தலைமையிலான சத்தீஸ்கர் அரசு பழங்குடியினரை அச்சுறுத்தி கைது செய்து வருகிறது. கவர்தா மாவட்டத்திலும் மிரட்டல் விடுக்கப்படுகிறது.” என்றார்.
இதேபோல், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் கூறுகையில், “சுட்டுக்கொல்லப்பட்ட 29 பேரும் நக்ஸலைட்டுகள் மட்டும்தானா அல்லது அவர்களில் கிராமவாசிகளும் உள்ளனரா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இதில் ஏதேனும் அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டிருந்தால், அரசாங்கம் பழங்குடியினரிடமிருந்து கடுமையான கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் கிராமவாசிகள் கொல்லப்பட்ட பல சம்பவங்களை நாம் கண்டிருக்கிறோம்" என்றார்.
இந்நிலையில் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அம்மாநில முதல்வர் விஜய் சர்மா, “இந்த என்கவுன்ட்டர் போலியானது என மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளது வருத்தமளிக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? நான் பார்த்த வீரர்கள் பொய்யாக காயமடைந்தார்களா?
மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் போலியானவையா? சீருடை அணிந்த அனைத்து நக்ஸல்களும் கொல்லப்பட்டுள்ளனர். இது போலியானதா? இப்போது இதைச் சொல்வதும், விஷயத்தை மாற்றுவதும் மிகவும் தவறானது” என்றார்.
சத்தீஸ்கரில் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸும், பாஜகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!
புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!
தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!
நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!