
மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பிரமோத் திவாரியையும், கட்சியின் கொறடாவாக ரஜனி பாட்டீலையும் நியமனம் செய்ய அக்கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பிரமோத் திவாரியையும், கொறடாவாக ரஜனி பாட்டீலையும் நியமிக்க காங்கிரஸ் இன்று ஒப்புதல் அளித்தது. ஆனந்த் சர்மாவின் ஓய்வு மற்றும் ராஜீவ் சதவ் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள இடங்களை நிரப்ப காங்கிரஸ் தலைவரால் இந்த நியமனம் செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நியமனங்கள் தொடர்பான கடிதம் மாநிலங்களவை தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பிரமோத் திவாரி மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும், உத்தரபிரதேச அரசாங்கத்தில் முன்னாள் கேபினட் அமைச்சராகவும் இருந்துள்ளார். ரஜனி பாட்டீல் மகாராஷ்டிராவிலிருந்து இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். பாட்டீல் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டதற்காக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதற்கும் மேல் சபையில் இருந்து தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.