‘நீங்கள் சொல்லுகிற நேரம், சொல்லுகிற இடத்திற்கு வரத்தயார்!’

திருமாவிற்கு சவால் விடும் அண்ணாமலை
‘நீங்கள் சொல்லுகிற நேரம், சொல்லுகிற இடத்திற்கு வரத்தயார்!’

"நீங்கள் சொல்லுகின்ற நேரத்தில், சொல்லுகின்ற இடத்தில் அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை சித்தாந்தத்தை எடுத்துரைக்க தயாராக இருப்பதாக" விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாஜக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது . இதற்கு காரணமான பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமை, திருமாவளவனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அண்ணன் திருமாவளவனுக்கு எனத்துவங்கும் அந்த கடிதத்தில், “அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பாஜக இன்று வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது, எத்தனை காலம் மக்களை உங்களுடைய பொய் புரட்டுகளை வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்?.

பாஜக தொண்டர்களை விசிகவினர் தாக்கியது எனக்கு மிகுந்த மன வேதனை அளித்தாலும் கூட, உங்களுடைய தொண்டர்கள் தவறான வழிகாட்டுதலின் பால் அதை செய்கின்றார்கள் என்றும் எனக்கு தெரியும். எங்கள் தொண்டர்கள் கண்ணிலே எனக்கு பயம் தெரியவில்லை; நல்ல சமுதாயத்தை படைப்பதற்கான முயற்சி தெரிந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்," நீங்கள் சொல்லுகின்ற நேரத்திலே, சொல்லுகின்ற இடத்திலே தமிழ்நாடு பாஜக சார்பாக, அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பாஜக இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது? எப்படி பிரதமர் மோடி அவருடைய வாழ்க்கையை அம்பேத்கர் வகுத்து கொடுத்த பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன். இடத்தையும், நேரத்தையும் நீங்கள் கூறுங்கள்" என்று திருமாவளவனுக்கு ட்விட்டர் மூலம் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in