ஜூன் 4ம் தேதிக்கு பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தை மாஃபியாக்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்க இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர், ’ஜூன் 4ம் தேதிக்கு பிறகு உத்தரப்பிரதேசத்தை மாஃபியா இல்லாத மாநிலம் என அறிவிக்க இருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டத்தில் மாஃபியாக்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவதாக அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்கான செயல் திட்டம் தயாராக உள்ளது.’
‘மாநிலத்தில் அமைதியை கெடுக்க முயல்பவர்கள் அதற்கான தண்டனையை 7 ஜென்மங்களுக்கும் பெற வேண்டி இருக்கும். சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆசம் கான் மட்டுமல்ல, எந்த மாஃபியா தலைவரும் என்ன விதைக்கிறாரோ அதையே அறுவடை செய்ய வேண்டி இருக்கும். மகாபாரதத்தில் திரௌபதி துயிலுரியப்பட்டபோது, துரியோதனன், துச்சாதனன் முன்னிலையில் அனைவரும் அமைதியாக இருந்தனர். அதற்கான பலனையும் அனுபவித்தனர்.’
‘அதேபோன்று தான் தற்போது உத்தரப் பிரதேசத்திலும் நடக்க இருக்கிறது. மக்களுக்கு எதிரானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாஃபியாக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் நிலத்தில், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவை கட்டப்படும். அவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் சொத்துக்கள் மூலமாக அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து தரப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.