`அமைச்சரே தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கச் சொல்லிவிட்டார் முதல்வர்'- அமைச்சர் மூர்த்தி தகவல்

அமைச்சர் பி. மூர்த்தி
அமைச்சர் பி. மூர்த்தி

``அமைச்சர்கள், அதிகாரிகள் என யார் தவறு செய்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்'' என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன, அதன் ஒரு பகுதியாக மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

897 பயனாளிகளுக்கு 8 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, "மதுரை மாவட்டத்தில் ஓராண்டில் 1 லட்சம் பேருக்கு 300 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதிமுக அரசு விட்டுச்சென்ற 6 லட்சம் கோடி கடனை சமாளித்து நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்" என்றார்.

தொடர்ந்து பேசுகையில், "பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும். அவர், மக்களுக்கு ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ய வேண்டும். முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறார்.

அமைச்சர்கள், அதிகாரிகள் என யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒன்றிய அரசு எய்ம்ஸ்க்கு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசுக்குக் கடன்கள் உள்ள நிலையிலும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து வர வேண்டிய மின்சாரம் வராத காரணத்தால் தமிழகத்தில் மின் தடை ஏற்படுகிறது” என்றார் மூர்த்தி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in