
’’சின்ன வயதிலேயே குழந்தைக்கு சாதி என்றால் என்ன என தெரிய தொடங்குகிறது அதற்கு காரணம் சினிமாதான். சினிமாவில் அதிகமாக சாதிப் படங்களை எடுத்ததால்தான் இந்த வினை’’ என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
சாதி மோதல் காரணமாக நாங்குநேரியில் மாணவன் சின்னதுரை சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது, ‘’சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்கிறோம். ஆனால் நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனை அவரது வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து வெட்டியுள்ளனர். சாதியை ஒழிக்க வேண்டும் என பேசுகிறோம். ஆனால் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க போகும் போது என்ன சாதி என கேட்கிறார்கள்.
சின்ன வயதிலேயே அந்த குழந்தைக்கு சாதி என்றால் என்ன என தெரிய தொடங்குகிறது. இதைவிட காரணம் சினிமா. சினிமாவில் அதிகமாக சாதி படங்களை எடுத்ததால்தான் இந்த வினை. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இயக்குநர் முத்தையாதான். ’கொம்பன்’ என்ற படத்தை எடுத்து இதை ஆரம்பித்து வைத்தது அவர்தான். அதன் பிறகு இயக்குநர் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் என பல இயக்குநர்கள் சாதி படத்தை எடுப்பதை தொடர்கிறார்கள்.
தனது ஜாதியை உயர்த்துவது தவறில்லை, ஆனால் அடுத்தவரின் சாதி தாழ்த்திக் காட்டுவதுதான் தப்பு. இன்று சாதி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த வெட்டுப்பட்ட மாணவனுக்கு ரூ.10 லட்சம், 20 லட்சம் கொடுப்பார்களா’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.