குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு... பணியில் இல்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள்: அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்

குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு... பணியில் இல்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள்: அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்

ராணிப்பேட்டை மாவட்டம், காரைக்கூட்ரோட்டில் உள்ள அரசினர் குழந்தை இல்லத்தில் இன்று திடீரென ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பணியில் இல்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.

திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து ரூ.118 கோடியில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதன்பின்னர் நடந்த விழாவில், 257 கோடியில் 71,103 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்த முதல்வர், ஆசிரியர்களிடம் அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த முதல்வர், பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது விளக்கம்கோரி நடவடிக்கை எடுக்கவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in