சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் அமைந்துள்ள பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் முழு உருவச் சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலையை நிறுவ வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் முடிவு செய்திருந்தார். அதற்காக அம்பேத்கரின் கடந்த ஏப்ரல் மாதம் 132-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது முழு உருவச்சிலையை தயார் செய்து அளித்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் அதனை நிறுவுவதற்கான இடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அனுமதி அளித்திருந்தார். அதன் பெயரில் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் முழு உருவச்சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.