’அன்பின் முழுவடிவம் அன்னையரே’... தாய்மார்களுக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!

மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி
மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி

இன்று உலகெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தாய்மார்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். 'உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா!

தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்!. ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!' என ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும்  அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது.

போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in