மறைந்த பேராசிரியர் அன்பழகனின் புகைப்படக்கண்காட்சியில் அவரது இரண்டாவது மனைவி சாந்தகுமாரியின் புகைப்படம் இடம் பெறாததற்கு அவரது பேத்தி கயல்விழி லட்சுமணன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் அன்பழகனின் இரண்டாவது மனைவி சாந்தகுமாரியின் புகைப்படம் இடம்பெறவில்லை என அவரது பேத்தி கயல்விழி லட்சுமணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இவர் தனது முகநூல் பக்கத்தில் "என் தாத்தா அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சி நாளைவரை நடைபெறுகிறது. நானும் என்அக்கா கனிமொழி லட்சுமணனும் அழைப்பின் பேரில் கண்காட்சியைக் காணச் சென்றோம். எல்லாம் நன்றாக இருந்தது, ஆனால் ஒரு வருத்தம் மேலோங்கி இருக்கிறது. காரணம் 60 வருடத்திற்கும் மேல் என் தாத்தாவின் மனைவியாக வாழ்ந்த என் பாட்டி மருத்துவர் சாந்தகுமாரியின் படம் ஒன்று கூட அங்கு இல்லை.
அவருடைய முதல் மனைவி இறந்த பின் என் பாட்டியை மணந்தார். இருவரும் 60 ஆண்டுகளுக்கு மேல் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்துள்ளனர். அவ்வாறு இருக்கும் பொழுது என் பாட்டியை மட்டும் புறக்கணிக்க அவசியம் என்ன? அவரது இரண்டாவது மனைவி என்பதாலா ? முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தன் சகோதரி கனிமொழி அவர்களின் தாயாருக்கே அவ்வளவு மரியாதையும் கொடுப்பவர். எப்படி இதை செய்யாமல் போனார்? என் பாட்டியின் இறப்பு அன்று நாள் முழுவதும் கூடவே இருந்து சுடுகாடு வரை நடந்து வந்து எல்லா காரியத்திலும் என் பாட்டியின் மகன் போலவே ஈடுபாட்டுடன் காரியங்களை நடத்திக் கொடுத்தார். அப்படி இருக்க முதல்வர் எப்படி எங்கள் பாட்டியைப் புறக்கணித்தார். ஏற்றுக் கொள்ள முடியவில்லை எங்களால்" என பதிவிட்டுள்ளார்.