`அரசின் முடிவுகளை நியமன ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது'- உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டும் முதல்வர்

`அரசின் முடிவுகளை நியமன ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது'- உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டும் முதல்வர்

மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக ஆறு பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமன பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும் ஆதாரம் என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `பேரறிவாளன் விடுதலை தொடங்கி இன்று நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையில் இருந்த காலத்தில் அவர்கள் நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆட்சியில் இருக்கும் போதும் அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை முதன் முதலில் ஆயுள் தண்டனையாக மாற்றியது கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். அதன் பிறகும் இவர்கள் அனைவரின் விடுதலையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்த போதும் அழுத்தம் கொடுத்தது, ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் எந்த முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை மற்றும் மனிதநேயத்தின் பக்கமாக நின்று நீதிமன்றத்திலும் வாதாடியும், போராடியும் வந்தோம்.

மாநில அரசின் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். அதற்கான அனுமதியை வழங்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம். இந்நிலையில் பேரறிவான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் சட்ட பிரிவுகளை மையப்படுத்திய வாதங்களை வைத்து வாதாடினோம். மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. ஏழு பேர் விடுதலையில் இது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது.

அடுத்தபடியாக நளினி, ரவிச்சந்திரன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோரின் விடுதலையும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து இன்றைக்கு அவர்களுக்கும் பேரறிவாளன் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனித நேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி. ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடத்திய வலிமையான சட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. மனிதநேயத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி இது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமன பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது` என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in